திருச்சி மேற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரி பகுதியில் மடி கணினியுடன் இளைஞர் ஒருவர் சுற்றியது குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என் நேரு தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
புகாரை பெற்று கொண்ட அலுவலர் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது வேண்டுமென்றால் எங்களிடத்தில் டெமோ வாக்கு இயந்திரம் இருக்கிறது. உங்களிடம் ஹேக்கர்ஸ் இருந்தால் கொண்டு வந்து செயல்படுத்தி காட்டுங்கள் என்று அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு ,திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிக்கடி சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே சந்தேகப்படும்படி வாகனம் வந்தது. ட்ரோன் ஒன்று பறந்தது.
தற்போது, மடிக்கணினியுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கேட்டால் சிசிடிவி பொருத்த வந்ததாக சொல்கிறார்கள். இந்த மையத்தில் மட்டும் அடிக்கடி இது போல் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.