ஈ.வெ.ரா பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார்.
பெரியார் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள், யாரும் எழுத, பேச தயங்கியவையாகும். பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவதென்றால் அவையை பத்து நாட்கள் ஒத்திவைத்து விட்டுத்தான் பேச வேண்டும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.
பெரியாரைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கிறேன்.
தமிழகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் .தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக சமூகநீதி நாளை கொண்டாடுவோம்! என தெரிவித்துள்ளார். -சா.கற்பகவிக்னேஷ்வரன்