அதிமுக பொதுக்குழு சர்ச்சையுடன் நடந்து முடிந்த நிலையில், அதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் ஒற்றைத் தலைமை குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனதால் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் ,கே.பி.முனுசாமியும் தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.
மேலும் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சி.வி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அ.தி.மு.க வழக்கறிஞர் பாலமுருகன் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டு இது குறித்து பேட்டியளித்த வழக்கறிஞர் பால முருகன், சி.வி.சண்முகத்திற்கு கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளாகவும், அழைப்புகளாகவும் வருகின்றன.அதனால் காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவிடம் புகார் மனு அளித்துள்ளோம். புகாரை விசாரித்து அவர்களை கைது செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.