பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மக்கள் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் ஆல் பாஸ் என அரசு அறிவித்தது. இதனையடுத்து, மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்து பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தனித்தேர்வை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தனித்தேர்வை எழுதுவதற்கான சூழல் தற்போது நிலவவில்லை என்பதால் அதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை நடத்தியதில் யாருக்கும் தொற்று இல்லை….. என்பது தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.