தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கிய மலை கோவில்களில், ‘ரோப் கார்’ வசதி செய்ய, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘பழநி கோவிலில் ரோப் கார் வசதி உள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மலை கோவில்களில், பக்தர்கள் வசதிக்காக கேபிள் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் , சோளிங்கர் மற்றும் அய்யன்மலையில், ரோப் கார் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மேலும், திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுகுன்றம் உள்ளிட்ட மலை கோவில்களில் ரோப் கார் வசதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறோம். சில இடங்களில் பஸ் வசதி உள்ளது, என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், ‘சாத்தியக்கூறு உள்ள இடங்களில், ரோப் கார் வசதி மேற்கொள்வது குறித்து, அரசுக்கு மனுதாரர் மனு அனுப்பலாம்; சாத்தியக்கூறு மற்றும் இதர அம்சங்களைப் பொறுத்து, அரசு முடிவு செய்யும்’ என தெரிவித்தது.