விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையில் பணம் இல்லாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் 26 குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையில் பணம் இல்லாததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை 26 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளதாகவும் மற்ற 25 பேரின் காசோலையில் பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்,
புகார் மனுவில் தாங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரண உதவி தொகையை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள விடுத்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்த தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. மேலும் மாநில அரசு அறிவித்துள்ள தலா 3 லட்சம் நிவாரண தொகை இதுவரை 17 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது 27 குடும்பத்தினரும் குடும்ப தலைவர்களை இழந்து நிற்கதியாக உள்ள நிலையில் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் அனைவருக்கும் முறையாக நிவாரண உதவித்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் கண்ணனிடம் கேட்ட போது உரிய விசாரணை நடத்தி நிவாரண தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.