சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக பேரவையில் நடைபெறும் கேள்வி நேரம் நேரலை வழியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என, தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. சட்டசபையில் நேற்று கவர்னர் உரையாற்றினார். இந்நிகழ்வு, தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை, ‘யூ டியூப்’ தளத்திலும், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’யிலும், நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக பேரவையில் நடைபெறும் கேள்வி நேரம் நேரலை வழியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் நேரடியாக பதில் அளித்து வருகின்றனர். முதல் கேள்வியாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி கேள்விக்கு முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் பதிலளித்தார். வண்டலூரில் சென்னை மாநகருக்கு புதியபேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் முதல் கேளம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டியுள்ளது. இதனைக் கருதி திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் உதவியோடு முடிக்கப்பட்டு, அரசின் ஆய்வில் உள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் பணிகள் விரைவாக தொடங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.