சென்னை:-
சென்னையில் OMR எனப்படும் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, 30ம் தேதியுடன் நிறுத்தப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு அறிவித்தார்.
சட்டசபையில், நெடுஞ்சாலைத் துறைக்கான மானிய கோரிக்கை பதிலுரைக்கு பிறகு, சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அமைச்சர் வேலு வெளியிட்ட அறிவிப்பில்,
மத்திய கைலாஷ் சந்திப்பில், ராஜிவ்காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில், 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்படும்
மவுன்ட் – பூந்தமல்லி – ஆவடி சாலையில், ராமாபுரம் மற்றும் முகலிவாக்கம் சந்திப்புகளில், 3.14 கி.மீ., நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
மவுன்ட் – மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில், கீழ்பாலம் அமைக்கப்படும். இப்பணிகள், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும்
கிழக்கு தாம்பரத்தையும், மேற்கு தாம்பரத்தையும், முடிச்சூர் சாலையையும் இணைக்கும் விதமாக, பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை மற்றும் சேவை சாலை அமைக்கப்படும்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் தாம்பரம் சண்முகம் சாலையை வகையில் சாலை அமைக்கப்படும். இப்பணிகளுக்கு, 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படுவதை தொடர்ந்து, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, 30ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அமைச்சர் வேலு அறிவித்தார்.