ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேல் முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடமிருந்து, கடனைத் திருப்பி வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதிவாய்ந்தவர்களுக்கு அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக தகுதியான நபர்களைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இதில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக 5 சவரணிற்குமேல் நகைக்கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிட்ட 40 கிராமிற்குமேல் பெறப்பட்ட நகைக்கடன் தொகையை கடன்தாரர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூலிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்