சென்னை:-
கடந்த 15 ஆம் தேதி 100 வயதை எட்டிய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான
என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கும் தமிழ் இன வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தகைசால் தமிழர் விருதில் ரூ.10 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் இடம்பெற்று இருக்கும்
இளம்வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மாணவர் தலைவராகவும் சுதந்திர போராளியாகவும் திகழ்ந்தவர் சங்கரய்யா. 3 முறை சட்டமன்ற உறுப்பினராக அரும்பணியாற்றியவர் என்.சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கிய தகைசால் தமிழர் விருது முதலாவதாக சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது. வரும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருதினை என். சங்கரய்யாவுக்கு வழங்குகிறார்.