தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது.
இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று, சென்னையில் மெட்ரோ ரயில்களைக் குறைந்த அளவில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகம், மளிகை கடைகள் உள்ளிட்டவைகளுக்கு முந்தைய ஊரடங்கில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.