ஒரு மாணவனை இந்த சமூகத்திற்கு மிகச் சிறந்த மனிதனாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.ஒரு மாணவனுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது ஆசிரியர்கள்தான். ஒழுக்கத்தை, பழக்கவழக்கத்தை மிகச்சிறப்பாக தமிழக ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்து வருகிறார்கள் .இந்த நிலையில் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வந்த மாணவ மாணவிகளை தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை மகிழ்வித்திருக்கிறார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் மங்கலம் கிராமத்தில் இருக்கக்கூடிய அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்.
இந்த தொடக்கப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தனர்.விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர் ஜெயச்சந்திரன் ஒரு போட்டி வைத்தார்.அதில் விடுமுறையை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை தன்னுடைய சொந்த செலவில் சென்னை சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும் மீண்டும் சென்னையில் இருந்து சிவகாசிக்கு விமானத்தில் அழைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பை சொல்லியிருக்கிறார் ஆசிரியர் ஜெயச்சந்திரன் இந்த அறிவிப்பை கண்டு ஆர்வம் அடைந்த மாணவ மாணவிகள் பலபேர் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கல்வி கற்றனர்.இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்களை ஆசிரியர் ஜெயச்சந்திரன் சென்னைக்கு சுற்றுலா அழைத்து வந்தார். சென்னையில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களை பார்வையிட வைத்து மீண்டும் அந்த 20 மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார்.
மாணவர்களிடத்தில் ஒழுக்கத்தை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற நிகழ்வுகளை முன் எடுத்ததாகவும் இந்த சுற்றுலாவிற்காக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்ததாகவும் தெரிவித்து இருக்கிறார் ஆசிரியர் ஜெயச்சந்திரன்.
சமூகத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்கி பெரும் ஆசிரியர் ஜெயச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.