கொரோனா பாதிப்பு சுனாமி போல பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 17 வது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் சுமார் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதாகவும், காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும், டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து சுனாமி அலை போல பரவி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு என்பது தேவை வெளியில் செல்லும் மக்கள் முககவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.