கனமழை காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,28) இரவு முதல் மழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதனையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், கூத்தாநல்லூர், வடுவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று இரவு மட்டும் திருவாரூரில் 8 சென்டி மீட்டர் மழையும், நன்னிலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மாவட்த்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.