சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், வட மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார்.
அதுபோன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.
அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.