கோவை:-
சாலை விபத்துகளை விடவும் மிக கோரமானது தீ விபத்து. இந்தியாவில் சராசரியாக தீ விபத்துகளினால் சுமார் 70 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் பத்து லட்சம் பேர் முகம், கை, கால்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தன் அன்றாட வாழ்வை இழக்கிறார்கள்.
தீ விபத்துகளினால் பாதிக்கப்படுபவர்களின் உயிரினைக் காப்பாற்றி விடுகிறார்கள். ஆனால் உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய அடுத்தகட்டமாக அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும். ஆனால் வசதியற்ற ஏழைகளுக்கு இந்த மருத்துவம் கிடைப்பதில்லை. இதனால் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளுடனே வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இனி தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்கள் கவலை வேண்டாம் அவர்களுக்கு ரோட்டரி க்ளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் மற்றும் கங்கா மருத்துவமனையும் இணைந்து “ஹோப் ஆஃப்டர் ஃபயர்” திட்டத்தின் வழியாக மறுவாழ்வினை வழங்கி வருகிறார்கள்.
ரோட்டரி க்ளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து கடந்த 2012 மார்ச் 12 முதல் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இது வரை இத்திட்டத்துக்காக 5 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் 550 பேருக்கு 905 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் முதல் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் கங்கா மருத்துவமனையில் செய்யப்படுகின்றது.
இந்தத் திட்டத்தில் கேரளா, டெல்லி, லக்னோ உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்திற்கான நிதியுதவியை ரோட்டரி க்ளப் ஆஃப் மெட்ரோபோலிஸ் வழங்கி வருகின்றது. இத்திட்டத்திற்காக தற்போது 3 கோடி ரூபாய் மேலும் செலவிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்துக்காக ரோட்டரி க்ளப் ஆஃப் மெட்ரோபோலிஸுடன் சர்வதேச ரோட்டரி ஃபவுண்டேஷன் வழியாக அமெரிக்காவின் ரோட்டரி க்ளப் ஆஃப் ஓக் ரிட்ஜும் நிதியினை தற்போது வழங்கியுள்ளது.
தீக்காயங்களினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சைகள் வழங்கும் “ஹோப் ஆஃப்டர் ஃபயர்” திட்டத்தின் துவக்கவிழா இணையதளம் வழியாக ஜூன் 30 செவ்வாயன்று நடைபெற்றது.
இத்திட்டத்தின் தலைவர், கங்கா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜசபாபதி கூறுகையில்:-
இது எங்களுக்கு மிக ஆத்மார்த்தமான பணி. தீ விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றிவிடுகிறோம். அதன் பின் அவர்கள் உடலில் ஏற்படும் காயங்களும், ஊனங்களுக்கும் சிகிச்சைகள் பார்க்க வேண்டும். இதற்கு மருத்துவம் பார்க்க பண வசதி இல்லாமல் இருப்பதாலும் அல்லது அறியாமையால் அன்றாட வாழ்க்கையை பலர் இழந்து துன்பப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வினைப் புணரமைத்து அவர்களின் இயல்பு வாழ்வினைத் திருப்பி அளிப்பதே எங்களின் நோக்கம். தீ விபத்தினால் ஏற்பட்ட உடல் அங்கஹீனங்களை அறுவைச் சிகிச்சையின் வழியாக சரி செய்து விட முடியும். இந்த அறுவை சிகிச்சைகளை ரோட்டரி க்ளப் ஆஃப் மெட்ரோபோலிஸுடன் இணைந்து இலவசமாக வழங்கி வருகிறோம்.
அறுவைச் சிகிச்சைகளில் அதிக செலவினங்கள் பிடிப்பது அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ கட்டணம். அதனை முழுமையாக கங்கா மருத்துவமனை ஏற்றுக் கொள்கிறது. சிகிச்சைக்குப் பின்பும் பூரண குணமடையும் வரை தொடர்ந்து கண்காணித்து மருத்துவமும், ஆலோசனைகளும் வழங்குகின்றோம். வேலை வாய்ப்புகள் தேவைப்படுவோருக்கும் வழிவகை செய்கிறோம். தீ விபத்துக்களில் பாதிக்கப்பட்டோர் பிறரைச் சார்ந்திருக்காமல் தங்களின் அன்றாட வாழ்வுக்குத் திரும்பியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இத்திட்டம் குறித்து ரோட்டரி க்ளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸின் தலைவர் பி.ஆர்.விட்டல் கூறுகையில்:-
ரோட்டரி மாவட்டம் 3201 வரலாற்றில் 3 கோடி ரூபாய் வரையிலான தொகையினை ஒரு திட்டத்துக்கு செலவிடுவது இதுவே முதல் முறை. “ஹோப் ஆஃப்டர் ஃபயர்” திட்டத்தின் கீழ் உதவி தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கூறினார்.
இதன் துவக்க விழாவில் ரோட்டரி மாவட்ட கவர்னர் ஆர்.மாதவ் சந்திரன், மாவட்ட ரோட்டரி ஃபவுண்டேஷன் தலைவர் ஜெய்சங்கர், மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு, ரோட்டரியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தில் சிகிச்சை தேவைப்படுபவர்கள் ரமேஷ் வீரராகவன், தருண் ஷா ஆகியோரை 9751576946, 9842244040 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.