சென்னை:-
இ-பாஸ் எனப்படும் பயண அனுமதிச் சீட்டுப் பெறுவதற்கான புதிய நடைமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய நிகழ்ச்சிகளான முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், எதிர்பாராத மரணம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான காரணங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வது குறித்து ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, https://tnepass.tnega.org/#/user/pass என்கிற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பாஸ் பெறலாம். மாவட்டத்துக்குள் செல்வதற்கான அனுமதிச் சீட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்டத் தொழில் மையம் அல்லது சென்னைப் பெருநகர ஆணையர் ஆகியோரால் வழங்கப்படும்.
மாவட்டங்களைக் கடந்து செல்லும் அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வழங்கப்படும். மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வதற்கான அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மட்டுமே வழங்கப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்துப் பெறலாம்.
தனிநபர்களுக்கான பாஸ் குடும்பத்தினரின் திருமணம், மரணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மருத்துவக் காரணங்களுக்கு என்றால் நோயாளியுடன் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். அதற்கு மருத்துவரின் சான்றை இணைக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 1070 எண்ணை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களும் அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர். அவர்கள் இதுபற்றி உடனடியாக சுகாதாரததுறை அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும்.