தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கு, ‘அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற தனியார் இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.
இக்கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய 4 பாடப்பிரிவுகள் இடம்பெறவுள்ளன. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் வகுப்பறைகள், மாணவ, மாணவியரின் ஆய்வக அறைகள், அடிப்படை வசதிகள், நூலகம், கணினி ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீகம் சார்ந்த பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.