நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்து தனது கண்டனத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
டெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி, உளவுத்துறையின் தோல்வி என்பது உள்துறை அமைச்சகத்தின் தோல்விதான், இந்த கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என கடுமையாக பேசியிருந்தார் ரஜினி. தவிர, CAA குறித்தும் NPR மற்றும் NRC குறித்தும் இஸ்லாமிய மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள் என்றார்.
இது பற்றி தங்களுக்கு புரிதல் வேண்டும் என எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து நாம் நேரில் பேசுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் சந்தித்து பேசினார்.
ரஜினிகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அபுபக்கர் கூறியதாவது:-
ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தவிர, அவர் எனது 40 கால குடும்ப நண்பர். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை அப்போது பகிர்ந்து கொண்டோம். டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். இதில் எந்தவித அரசியல் உள் நோக்கமும் இல்லை.
மேலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாம் சொல்லி கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது எதுவும் இல்லை, அவருக்கு அனைத்தும் தெரியும். CAA, NRP மற்றும் NRC எல்லாவற்றையும் ஆழ்ந்து படித்துள்ளார்.
நாம் இஸ்லாமியரோ, ஹிந்துவோ, கிரிஸ்தவரோ எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், தொப்புள் கொடி உறவுகள். இந்திய நாட்டில் பொருளாதாரத்தில் நாடு சிறப்பாக வரவேண்டும் என்பது தான் நடிகர் ரஜினியின் எண்ணமாக உள்ளது என்னுடைய எண்ணமும் அது தான் என்று கூறினார்.