2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக கவுதம் சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாக கூறி மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் ஆகியோர் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இதில் 60 லட்சம் ரூபாய் இந்த வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டான ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு அவர்கள் வழங்கியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை போலீஸார் தாக்கல் செய்தனர்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த
லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி ஒம் பிரகாஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி சம்பத்குமார்
உள்ளிட்ட நால்வரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.