சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘சென்னையில் ஒரு ஷாகின்பாத்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்று வருகிறது.
கடந்த 14ம் தேதி ஏற்பட்ட தடியடியை தொடர்ந்து இப்போராட்டம் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு மத பேதமில்லாமல் அப்பகுதி இந்துக்கள் ஆதரவு தெரிவித்தும் , உதவியும் செய்தும் வருகின்றனர்,.
இந்நிலையில் போராட்ட மேடையில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணுக்கு இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மற்ற இஸ்லாமிய பெண்கள் வளையல் அணிவித்து அவரை வாழ்த்தினர்.
மேலும் அங்கு வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் ‘இஸ்லாமியர்கள் அனைவரும் என் தொப்புள்கொடி உறவுகளே’ என்ற வாசகம் பதிவிட்ட தாம்பூலப்பை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே இந்த போராட்ட களத்தில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி இஸ்லாமிய திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.