விசாகப்பட்டினம்:-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஸ்டைரீன் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் தங்க 4 அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஏழாம் தேதி (May 7) 12 பேரைப் பலிகொண்ட இந்த சம்பவத்திற்குப் பின், 5 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விஷவாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து கிராமங்களில் கே கண்ணன் பாபு (விவசாயத்துறை அமைச்சர்), போட்சா சத்தியநாராயணா (நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர்), முத்தம் செட்டி ஸ்ரீனிவாசராவ் (சுற்றுலா துறை அமைச்சர்), தர்மனா கிருஷ்ணதாஸ் (சாலைகள் துறை அமைச்சர்) ஆகிய அமைச்சர்களை கிராமங்களில் இரவு நேரத்தில் தங்க ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
அப்பகுதியில் விசாகப்பட்டினம் மாநகராட்சி பணியாளர்கள் முழுமையான தூய்மை நடவடிக்கைகள் மேற்கொண்டனர், கிராம மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
எனினும் விஷவாயு பாதிப்பின் எச்சங்கள் இருக்கக் கூடும் என்பதால் A/C, சமையலறை, திறந்த வெளி நீர் நிலைகள் பால்பொருட்கள், கால்நடைத் தீவனங்கள் உள்ளிட்டவற்றை வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும் வரை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே CSIR-NEERI-ஐ சேர்ந்த சிறப்பு நிபுணர் குழு கிராமங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.