987 பள்ளிகள் அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த சேலத்தை சேர்ந்த மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நீதிகேட்டு பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பள்ளியில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டன.இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சி பி.எஸ்.இ ,மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மூடப்படும் என அறிவித்தனர்.
இதனையடுத்து தங்களின் அனுமதியில்லாமல் பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை மீறி மூடப்பட்ட பள்ளிகள் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டார்.
அதில் திருநெல்வேலி, கரூர், அரியலூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் செயல்பட்டுள்ளதாகவும் மொத்தம் உள்ள 11,335 பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே செயல்படவில்லை அந்த வகையில் தமிழகத்தில் 91 சதவிகிதம் பள்ளிகள் இயங்கியுள்ளன 9 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் எனவும்,பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.