மதுரை,
இன்றைய நவீன 21-ம் நூற்றாண்டிலும் மாதவிலக்கான பெண்களை ஊருக்கு வெளியே உள்ள தனி அறைகளில் தங்க வைக்கும் கொடுமை தமிழகத்தில் இருந்து வருவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.
மதுரையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் கூவலப்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீடுகளில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. மாதவிடாய் ஆன பெண்களுக்கு என்றே பிரத்தியேகமாக இரண்டு அறைகள் (so called guest house) கட்டப்பட்டு உள்ளது.
இதில் ஒரு அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது, மற்றொரு அறை 5 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.
இந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் துணிப்பைகள் தொங்க விடப்பட்டுள்ளது.
துணிப்பைகளில் அங்கு தங்கும் பெண்களுக்கு தேவையான டம்ளர், தட்டு, உணவு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்படுகிறது. இவற்றை அந்த குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த கட்டடத்தில் இருக்கும் பெண்களை யாரேனும் தொட்டால் அவர்கள் குளிக்காமல் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து கூவலரம் கிராம மக்களிடம் விசாரித்த போது, அவர்கள் கூறியது:-
இது காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கம். எனவே இதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை, அதோடு இது எங்களுக்கு தவறாகவும் தெரியவில்லை, என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.