கிருஷ்ணகிரி:-
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மாங்கூழ் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா முழு ஊரடங்கு காரணமாக உலகமே முடங்கிப்போய் இருக்கிறது. இந்த வேலையில் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலைகளில் மாங்கூழ் அரவை தொடங்கியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி ஸ்ரீ தேவராஜா குழுமதலைவர் மதியழகன் கூறுகையில்:-
நாங்கள் ஒரு டன் மாம்பழங்களை ரூ.17,000 அளவிற்கு வாங்கி வருகிறோம். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாங்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
5 லட்சம் டன் அளவிற்கு மாங்கனிகள் வாங்கி மாங்கூழ் தயாரிக்க உள்ளோம். இந்த வருடம் கொரானோ முடக்கம் காரணமாக எந்த ஒரு தோட்டங்களுக்கும் நேரடியாக சென்று மாங்காய்களை பார்க்க முடியவில்லை.
எனவே இவ்வருடம் எவ்வளவு மாங்கனிகளை கிடைக்கப்பெறும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் உள்ள மாங்கனிகளை மட்டும் வாங்கி வருகிறோம். மேலும் கர்நாடக மாநிலம் கர்னூல், சீனிவாசபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளிலிருந்து மாங்கனிகளை வாங்கி மாங்கூழ் தயாரிக்க உள்ளோம். ஆனால் வெளிநாடுகளுக்கு மாங்காய் ஏற்றுமதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை ஊரடங்கு முடிந்தால் மட்டுமே மாங்கூழ் ஏற்றுமதி குறித்து தெரியும்.
மேலும், தொழிற்சாலைகளில் அரசு விதிமுறைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு முககவசம், கிருமிநாசினி, கையுறை ஆகியவை கொடுத்து சமூக இடைவெளியுடன் பணியாற்றி வருகின்றனர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் கூறுகையில்:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 40,000 ஹெக்டர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது, மழை இல்லாத காரணத்தினாலும் பருவநிலை மாற்றத்தாலும்100 சதவிதமாக இருந்த விளைச்சலில் 20 சதவிதம் மட்டுமே மா விளைந்துள்ளது.10 டன் விளையும் இடத்தில் ஒரு டன் மாங்காய் மட்டுமே விளைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு இந்த வருடம் மிகப்பெரும் பேரிழப்பு. எனவே தமிழக அரசு மா விவசாயிகளை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.