தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இத்திட்டம் ரூ.3,025 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசியபோது “தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் இந்த சிறப்பான விழாவில் நானும் பங்கேற்கக் கூடிய நல்லதொரு வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த அமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும் இந்த நிகழ்ச்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கத்தில் நடைபெறுவது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று சொன்னவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.
இன்று இலட்சக்கணக்கான உழவர்களின் முகத்தில் மலர்ச்சியை உருவாக்க கூடிய வகையில் ஒரு திட்டமாக, இந்தத் திட்டம் அமைந்துள்ளது. மே மாதம் 7-ஆம் நாள் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றேன் என்று சொல்ல மாட்டேன் பொறுப்பை ஏற்றேன், அதுதான் சரியாக இருக்கும். அன்றுமுதல் இன்றுவரை நாள்தோறும் ஏராளமான திட்டங்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுடைய பயன்பாட்டிற்கு போகக்கூடிய வகையிலே இருக்க வேண்டும் என்பதுதான் அரசினுடைய திட்டமாக இருக்கிறது. உழவர்கள் பயன்பெறுவதால், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தரப் போகிறார்கள்.
கடந்த 20065-11 தி.மு.கழக ஆட்சி காலத்தில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011-16 அதிமுக ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும் தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான். பத்து ஆண்டு காலத்திலே சுமார் 2 லட்சம் இணைப்புகள்தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டுள்ளன.
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை நாம் கொடுக்கப் போகிறோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தி.மு.க. ஆட்சி என்பதே உழவர்களின் ஆட்சியாக, வேளாண்மைப் புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. இந்த மண்ணையும் மக்களையும் காப்பதில் யாருக்கும் சளைக்காதவர்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை இன்று வழங்கி இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும். உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும். மின்துறை அமைச்சராக இருந்தாலும் வேளாண் துறையைச் சேர்ந்த உழவர் பெருங்குடி மக்களுக்கும் சேர்த்து நல்லதொரு திட்டத்தைச் செயல்படுத்திய மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைப் மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அனைவரும் சேர்ந்து இம்மண்ணையும் மக்களையும் காப்போம்.” என்று தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் மீது குறைகள் மற்றும் குற்றாச்சாட்டுக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்