கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள் நெல்லையில் கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவில் திருவிழாக்களை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், கோயில் திருவிழாக்களில் இரவு 12 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கோரி நெல்லையில் தென்மண்டல அனைத்து கலைச் சங்கங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரகாட்ட கலைஞர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் வேஷம் அணிந்து கொண்டு தலையில் கரகம் வைத்து கொண்டும் கரகாட்டம் ஆடியபடி ஊர்வலமாக வருவதற்கு தயாராகினர். ஆனால் ஆட்டம் ஆடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் அனுமதி இல்லை என்று போலீசார் மறுத்தனர். பிறகு கலைஞர்கள் கெஞ்சியதையடுத்து மூன்று மூன்று பேராக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைவரும் ஒன்று திரண்டு கோஷமிட்டனர் இது குறித்து திருநங்கை கரகாட்ட கலைஞர் வினோ கூறுகையில், எல்லா நிகழ்ச்சிக்கும் அனுமதிக்கிறார்கள் கோவில் திருவிழாவில் எங்களை போன்ற கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. பகல. முழுவதும் ஊரடங்கு போடாமல் இரவில் மட்டும் ஏன் ஊரடங்கு போட வேண்டும்? எங்கள் வாழ்வாதாரம் பற்றி அரசுக்கு கவலை இல்லையா. 2000 நிவாரணம் கொடுக்கிறார்கள் அது வைத்து வாழ்ந்து விட முடியுமா.
இரவு 12 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். இதே 2000 ரூபாய் நாங்கள் கொடுத்தால் அவர்களால் வாழ முடியுமா? எங்களுக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்