சென்னை :
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்துவரும் 48 மணிநேரத்திற்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
20.01.21 மற்றும் 21.01.21 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைப் பதிவாகியுள்ளது.
ஜனவரி 18-ல் தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்”.என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.