சென்னை:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கி, கடந்த மே 24 ஆம் தேதியில் இருந்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 7-ம் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார்.