மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்கள் இருவரும் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், அங்குள்ள இதர 247 மாணவர்களுடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதனிடையே பல்கலைக்கழகத்திற்கு ஏழு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.