கோயம்புத்தூர்:-
கோவையில் தன்னை கடித்த பாம்பை உயிரோடு பிடித்து, பையில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். பெயின்டிங் வேலை செய்து வருகின்றார். தனது, பணியை முடித்துவிட்டு நேற்று இரவு சௌரிபாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளது.
இதையறிந்த செளந்தராஜன் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். மது போதையில் இருந்த சௌந்தராஜன், அந்தப் பாம்பை அடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாம்பு அவரது கையில் கடித்துவிட்டது.
இதையடுத்து, அந்தப் பாம்பைப் பிடித்த சௌந்தராஜன் அதை ஒரு பையில் போட்டுக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில், ஒருவர் பாம்பை உயிருடன் பிடித்து வந்ததைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களிடம் காட்டிவிட்டு மீண்டும் அந்தப் பாம்பைப் பையில் போட்டு செக்யூரிட்டிகளிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர். இதனிடையே பாம்பு கடித்த சௌந்தராஜனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாம்பைப் பிடிப்பதற்கென்று முறைப்படி பயிற்சியும் அனுபவமும் இருப்பவர்கள் மட்டுமே அந்தப் பணிகளில் இறங்க வேண்டும். இல்லையென்றால் இப்படிதான் ஆகும்.