தமிழகம் முழுவதும் செப்டம்பர் 17ல் நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட அதிகமாக மொத்தம் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மெகா தடுப்பூசி முகாமிற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததால், செப்டம்பர்17ஆம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ தகவல் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு மன நல ஆலோசனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த முகாம் வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். அன்றைய தினம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 52 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 48 % பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சா.கற்பகவிக்னேஷ்வரன்