கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக சர்வதேச மீட்புப் படையின் உதவியை மத்திய அரசு பெற வேண்டும் என்றும் மாயமான மீனவர்களை இந்திய போர்க்கப்பல் மூலம் கண்டுபிடித்து தரவேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை சர்ப்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிலை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு கடந்த 9ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர் இந்நிலையில் 24ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேறொரு விசைப்படகு இந்த பதினோரு மீனவர்கள் சென்ற விசைப்படகின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவ்வழியாக வந்த சர்வதேச கப்பல் ஏதாவது இந்த படகு மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் மாயமான 11 மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய விசைப்படகு குறித்த தகவலை மீனவர் உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் இந்திய அரசு மாயமான மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கிடையே மாயமான 11 மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் விமானம் தாங்கிய போர் கப்பல் பயன்படுத்தி விரைந்து தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சர்வதேச கடலில் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சர்வதேச மீட்புப் படையின் உதவியை மத்திய அரசு நாட வேண்டும் என்றும் சம்பவம் நடந்த வழித்தடம் மூலம் சென்ற சர்வதேச கப்பல்களை கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.