மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 10 மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் அருகிலேயே பிளைவுட் ,டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு, எண்ணெய் குடோனில் திடீரென பற்றி எரிந்த தீ அருகில் இருந்த 2 பிளைவுட் பர்னிச்சர் குடோன், மற்றும் 6 டைல்ஸ் குடோன் ஆகியவற்றிற்கும் தீ பரவியது.
இங்குள்ள குடோன்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த எழும்பூர், கே.கே.நகர், ஆவடி, மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் குடோன் அருகே எண்ணெயுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டேங்கர் லாரிகளிலும் தீப்பற்றி அந்த லாரிகள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது.