நாமக்கல்:-
அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் அடையாளம் காணும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களுக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் வீடுகளுக்கு மூன்று வண்ணங்களில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மதிக்காமல் அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க ஸ்மார்ட் காப் (Smart Cop) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வெளியில் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ அல்லது கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களிலோ வெளியே சுற்றித் திரிபவர்களின் புகைப்படம், வாகனத்தின் புகைப்படம், மற்றும் அவரது விபரங்கள் செயலியில் பதிவு செய்யப்படும்.
அதற்குப் பிறகும் சம்பந்தப்பட்ட நபர் வீட்டிற்கு செல்லாமல் வெளியே சுற்றி திரிந்தால், வேறொரு இடத்தில் போலீசாரிடம் சிக்கும் பொழுது அவரது விவரங்களை மீண்டும் போலீசார் பதிவு செய்யும்பொழுது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவரங்கள் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயலி முதன் முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.