தமிழகத்தில் மருத்துவத்திற்கான நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதிபட கூறியுள்ளார்
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து தற்போது ஏகே ராஜன் தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையம் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி ஏகே ராஜன் அவர்களின் ஆணையத்தின் பரிந்துரையை அடிப்படையில் நீட் தேர்வு ரத்து என்ற சட்டம் இயற்றப்பட்டு நீட்தேர்வு கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்து இருக்கிறோம் என்றும் அதேபோல் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.