கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியது. அதனைதொடரந்து இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி உருவாக்கும் பணியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டன.
இதனிடையே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியை, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வருகிறது. அதேவேளை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். அதன்படி தற்போது இங்கிலாந்து ,சவுதி போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவ வாய்ப்புள்ளதா என அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதனால், கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலை பரவ வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.