தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம் பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினர்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.என தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புக்காக ஏற்கனவே உள்ள வழிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிகிறது என்றார்.