நீலகிரி:-
பெண் காவலர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெண் காவலர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சார்லஸ்.
அப்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் சார்லஸ் மீது மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.
பாலியல் புகார் தொடர்பாக, அப்போதைய கோவை சரக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். புகார் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றிய சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணியிடை நீக்க உத்தரவு, கோவை சரக டிஐஜி முத்துசாமி வாயிலாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் கூடுதல் எஸ்.பி. சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது பணிபுரியும் இடத்திலேயே கூடுதல் எஸ்.பி. சார்லஸ் தங்கியிருக்க வேண்டும்.
அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.