கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆய்வு பணிகளையும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ,
ஐந்தாண்டுகள் கோவில்களில் யானை பாகன்களாக பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. விரைவில் அனைவருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 180 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறினார்.
திருக்கோவில் நிலங்களுக்கு பட்டா கொடுக்க இயலாது. மயிலாடுதுறையில் அவ்வாறாக பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே திருக்கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதனிடையே கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.