திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகேயுள்ள செட்டிநாயக்கன்பட்டியில் மூதாட்டி ஒருவர் டீ கடை நடத்தி வந்தார்.பெயர் மீனாட்சி (60). இவர், தினந்தோறும் இரவில் கடையை மூடிவிட்டு அதன் உள்ளேயே தூங்குவார். இந்தநிலையில், நேற்றிரவு கடையை மூடிவிட்டு, வழக்கம்போல் கடைக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது டேவிட் நகரைச் சேர்ந்த பிரதீஸ் (19) என்ற இளைஞன், டீ கடையை திறக்கச் சொல்லி, மூதாட்டி மீனாட்சியிடம் தகராறு செய்துள்ளான். இதனையடுத்து கடையை திறந்து பார்த்தபோது, போதையில் இருந்த இளைஞர் பிரதீஸ், மூதாட்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதனையறிந்த பிரதீஸ், அங்கிருந்து தப்பியோட முயல்கையில், பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து, கை, கால்களை கட்டியுள்ளனர்.பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி, பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குற்றவாளி பிரதிஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் பிரதீஸ் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளன.
மேற்கொண்ட விசாரணையில் சிறு வயதிலேயே மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான இவர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், மூதாட்டி மீனாட்சிக்கும் இளைஞர் பிரதிஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.