சென்னை:
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.மெரினா கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதாலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காணும்பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள். அவர்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருவார்கள். புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள்.அப்போது அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்தை நிறுத்தியும், காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். குடும்பத்தினருடன் வரும் சிறுவர்கள் கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு புத்தாண்டுக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது போன்று காணும் பொங்கல் அன்று வருகிற 16-ந்தேதியும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.போலீசாரும், காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு போலவே காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை சீல் வைக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.இந்த பணிகள் எல்லாம் 15-ந்தேதி நள்ளிரவிலேயே முடிந்துவிடும். காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை. எனவே அன்று பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு வரவேண்டாம். பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள்.இந்த நாட்களில் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.