சென்னை:-
மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் விலையேற்றத்தை தடுத்து, அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில், லாப நோக்குடன் செயல்படுவோரை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
ஊரடங்கால், மக்களின் வழக்கமான வருமானம் குறைந்துள்ளது பலருக்கு வருமானம் இல்லை. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை, நாளுக்கு நாள் கூடி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. உணவு பொருட்களில், துவரம் பருப்பு விலை, 30 சதவீதம்; பூண்டு, மிளகாய் விலை, 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும், தாறுமாறாக உயர்ந்து வருகிறது.இந்த விலையேற்றம், இடைத்தரகர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கும்.
இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, லாப நோக்கத்துடன் செயல்பட கூடியவர்களை தடுத்து நிறுத்தி, விலையேற்றத்தையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும். ஏப்ரல் 1 வரையிலான 144 தடை உத்தரவை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்த, குடும்ப அட்டைகளுக்கான நிவாரணம், 1,000 ரூபாய் என்பது, 21 நாள் ஊரடங்கு காலத்திற்கு போதுமானதாக இல்லை.
டில்லியில் தனியார் ஆய்வகம் ஒன்று, நான்கு சக்கர வாகனத்திற்குள்ளேயே, சம்பந்தப்பட்டோரை உட்கார வைத்து, 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும், விரைவு சோதனையை மேற்கொண்டுள்ளது.விரைவு சோதனைகளை அதிகப்படுத்தும் வகையில், அரசுகள் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
கொரோனாவின் இறுதி விளைவாக, பட்டினி சாவுகள் ஏற்பட்டு விடாமல், தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.