சென்னை:-
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான பொதுமக்களை வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
இதனிடையே, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால், 70 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். 35% கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.