விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா (45). இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) அமைப்பையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவி ஒருவருக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் அடிப்படையில் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய தமிழ்ச்செல்வன், அந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி, 2 நாட்களாக, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து பேராசிரியர் தமிழ்ச்செல்வன் பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.