புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களின் துப்பாக்கிசுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள அம்மாசத்திரம் என்ற பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை என அழைக்கப்படும் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது 11 வயது மகன் புகழேந்தி, நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார்.
சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, காவலர் ஒருவர் சுட்ட இரண்டு குண்டுகள் நார்த்தாமலையில் உள்ள தாத்தா வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன் மீது பாய்ந்துள்ளது. முதல் குண்டு வீட்டின் சுவற்றை பதம்பார்த்த நிலையில், இரண்டாவது குண்டு சிறுவனின் இடது தலையில் பாய்ந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.