தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது. அந்தவகையில்,சம்பந்தபட்ட ஆசிரியர் மீதும், அவரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை – கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது.
குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகம், குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்காமல், கடுமையான நடவடிக்கை எடுத்து, இத்தகைய முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மத்திய – மாநில பள்ளிக் கல்வித்துறையினர், இதில் உரிய விசாரணை செய்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உறுதி செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.