கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் விற்கப்பட்ட இட்லியில் தவளை இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இட்லியில் தவளை இருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் முருகேசன் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, அவரது உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் 4 இட்லி பார்சல் வாங்கி வந்து முருகேசனிடம் கொடுத்துள்ளார்.
முருகேசன், இட்லி பார்சலை பிரித்து பார்த்தபோது ஒரு இட்லியில் கறுப்பாக ஏதோ தென்பட்டுள்ளது. அதனை உற்று பார்த்தபோது இறந்த நிலையில் தவளை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உணவக உரிமையாளரிடம் முறையிட்டபோது, சரியாக பதிலளிக்காமல், மீதமிருந்த இட்லி மாவை கீழே கொட்டிவிட்டு உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லெமன் சாதத்தில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இட்லியில் தவளை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் அடிக்கடி உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.