சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ எஸ் கே தங்கையா சாலையில் தனியாருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இரவு பகல் என ஷிப்ட் அடிப்படையில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.
ஒவ்வொரு ஷிப்ட் பணியின் போது சுமார் 250 ஆண் பெண் தொழிலாளர்கள் தீப்பெட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பகல் ஷிப்ட் வேலைகள் முடிந்த தொழிலாளர்கள் அனைவரும் வீடு திரும்பிய போது தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் மூலப் பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தன. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர், இருந்தபோதிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படும் இயந்திரம் மற்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தீக்குச்சிகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு சுமார் ரூபாய் 10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலை விபத்து காரணமாக அங்கிருந்து கிளம்பிய புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் பரவி அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பகல் பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில் இரவு பணிக்கு தொழிலாளர்கள் யாரும் வராத பட்சத்தில் இந்த தீ விபத்தின் போது யாருக்கும் எந்தவிதமான காயமோ உயிரிழப்போ இல்லாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்