உலகின் பல நாடுகளில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பள்ளி கல்லூரிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. அதேபோல ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.
ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை All Pass என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
ஏப்ரல் 14ம் தேதிக்கு (தமிழ் புத்தாண்டு) பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்